Monday, April 18, 2011

விவசாயம் செழிக்க விரைவான நடவடிக்கை : நம்மாழ்வார்.


"கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி' என்று போற்றப்படும் விவசாயிகள் நலன் பெறவும், விவசாயம் செழித்திடவும், அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

வேளாண்மைக்கு அடிப்படையானது விளைநிலம். வேளாண்மைக்குரிய நிலங்களை வேளாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற பிற பயன்பாடுகளுக்கு, விளை நிலத்தை எடுப்பதை, முதலில் தடை செய்ய வேண்டும்.கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில், 100 நாள் வேலையை எப்போது செய்ய வேண்டும் என்பதை, கிராம சபைகள் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான், வேளாண்மை தொழிலை கிராம மக்கள் தடையில்லாமல் செய்ய முடியும்.தமிழகத்துக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் நதிநீர்ப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைக்காக, அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு பார்லிமென்டை புறக்கணிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அப்போது தான், கடைமடை விவசாயிக்கும் தாராளமாக நீர் சென்றடையும். இப்பணிகளை உழவர் பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும். அப்போது தான், குளங்களில் தேக்கப்படும் நீரை, வேளாண்மைக்கு முழுமையாகப் பயன்படுத்த முடியும்.காவிரி ஆற்றில், கொள்ளிடம் பகுதியில், 17 கதவணைகளை அமைக்க வேண்டும் என, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன்மூலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கதவணைகளை மூடியும், பிற சமயங்களில் திறந்தும் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியும். கடலை நோக்கிச் செல்லும் காட்டாற்று நீரை தேக்கி பயன்படுத்த, தடுப்பணைகள் கட்ட வேண்டியது அவசியம்.

பால், உரமாக பயன்படும் எருவை வழங்கும் மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும். கிராமப்புற ஆண்களும், பெண்களும் கொண்ட குழுக்களை அமைத்து, அக்குழுவிடம், மாடு வளர்ப்பதை ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நிதியுதவியும் வழங்க வேண்டும்.ஆறு, ஏரி, குளம் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே, இயங்கி வரும் ஆலைகள் குறித்து கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு முடியும் வரை, அந்த ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரி, குளங்களில் மீன் வளர்ப்புக்கு ஊக்கம் அளிப்பதோடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் அப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், கிராமப்புற மக்களிடம் நிலவி வரும் சத்துணவு குறைபாடுகளைப் போக்க முடியும்.

தோட்டக்கலையில், சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்கள் மற்றும் மாம்பழம் போன்ற பழ வகைகள் சாகுபடியை பெருக்க வேண்டும். நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து பயிர்களையும் கொள்முதல் செய்ய புதிய மையங்களையும் தொடங்க வேண்டும்.
ஊராட்சிகளில் உழவர் ஆலோசனை மற்றும் சேவை மையங்களைத் தொடங்க வேண்டும். இதன் மூலமே, சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள் வழங்கலாம்; பயிர் சாகுபடி பற்றி ஆலோசனைகளை அளிக்கலாம்; வேளாண்மை கருவிகளை வழங்கலாம்.வெள்ளப்பெருக்கு காலங்களில், பயிர் சேதங்களைத் தடுக்க பாரம்பரியப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். ஒற்றை நாற்று முறை மூலம் நெல் உற்பத்தி 3 டன் முதல் 5 டன் எக்டேருக்கு அதிகரித்துள்ளது. இதை நாடு முழுவதும் பரப்புவதன் மூலம், அரிசி தட்டுப்பாட்டைப் போக்க முடியும். ஒற்றை நாற்று முறையை, மற்ற பயிர்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும்.

சோளம், கம்பு, தினை, சாமை போன்ற சத்துணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். தரிசாக உள்ள நிலங்களில், இதன் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.தேசிய பல்லின பன்மை வாரியத்தை தமிழகத்துக்கு என அமைக்க வேண்டும். மரபின மாற்றுப் பயிர்களை தடை செய்ய வேண்டும். மாநில பட்டியலில் தான் வேளாண்மை உள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை மாநில அரசே செய்ய முடியும். மரபின மாற்றுப் பயிர்களால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர் குடிக்கும் நோய்கள் பரவும் என்பதால், அதன் ஆராய்ச்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

கால்நடை மற்றும் விதைப் பண்ணைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், அதன் மூலம் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், மகளின் சுயஉதவிக் குழுக்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை வெற்றியடைந்து வரும் இந்த வேளையில், அதை விரிவுபடுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன வசதிகளை எற்படுத்த, 100 சதவீத மானியத்தையும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்த அளிக்கப்படும் மானியத்தை, இயற்கை வழி வேளாண்மையைச் செய்யும் விவசாயிக்கும் அளிக்க வேண்டும்.இவற்றை அடுத்து அமையும் அரசு விரைவாகச் செய்யுமானால், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?' என்ற பாடல் வரிகளை உண்மையாக்க முடியும்.

நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.

Thursday, April 14, 2011

காணாமல் போன " ஈயம் பித்தளை பேரீச்சைப்பழம் '

பழைய ஈயம், பித்தளைகளுக்கு பேரீச்சைபழம் தரும் வியாபாரம் காலத்தின் கோலத்தால் காணாமல் போய்விட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், வீடுகளில் உபயோகிக்கப்படும் பொருட்கள், பயனற்று போன நிலையிலும் பத்திரப்படுத்தப்படும். காலி சைக்கிளுடன் வரும் வியாபாரி, அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு, அதற்கு பதிலாக பேரீச்சம் பழம் உள்ளிட்ட உண்ணும் பொருட்களை கொடுப்பார். அடுத்த 30 நிமிடத்தில் தள்ளமுடியாத அளவுக்கு ஈயம், பித்தளை சாமான்களை சைக்கிளில் ஏற்றிச்செல்வார். குழந்தைகளுக்கு ஜவ் மிட்டாய், சீனி மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டன. இதற்காக அக்கம் பக்கத்தில் வசிப்போரின் பொருட்களை கூட குழந்தைகள் பதுக்கி வைத்து மிட்டாய் வாங்குவதும், பின்னர் விபரம் தெரிந்து அடிவாங்குவதும் தொடர்ந்தது. கால மாற்றத்தில் ஈயம், பித்தளை பயன்பாடு கணிசமாக குறைந்தது. ஆர்வமாய் இருந்த திண்பண்டங்கள், நாகரீக வளர்ச்சியில் முக சுழிப்பை ஏற்படுத்தின. இதனால் ஈயம், பித்தளை தேடி வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர் .
பிளாஸ்டிக் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் பிரபலமானதால், வியாபாரிகளும் அதை சேகரிப்பதில் நாட்டம் காட்டினர். இம்முறை பண்டம் தருவதற்கு பதிலாக பணம் பெறப்பட்டது. இதனால், தமிழகத்தில் இருந்த ஒரே பண்டமாற்று முறையும் முடிவுக்கு வந்தது. இப்போதெல்லாம், "பழைய ஈயம், பித்தளைக்கு பேரீச்சை பழம்,' என்ற, வார்த்தையை கேட்க முடிவதில்லை.

Friday, April 8, 2011

வீ.கே.புதூர் பகுதியில் தீவிர வாகன சோதனை

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகனங்களை சோதனை செய்தனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி ஓட்டு சேகரிப்பதை தடுக்கும் வகையில் போலீஸ் ஸ்டேஷன் வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை கொண்ட இக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீ.கே.புதூர் பகுதியில் கண்காணிப்பு குழுவினர் தாசில்தார் மணிபாபு தலைமையில் வாகனங்களை சோதனை செய்தனர். இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள், லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட்டனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. வாகன சோதனையில் வீ.கே.புதூர் தேர்தல் பிரிவு தாசில்தார் பால்துரை, மண்டல துணை தாசில்தார் சுதந்திரம், கண்காணிப்பு குழு உறுப்பினர், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்டெக்டர்கள் ராதா, முருகையா பாண்டியன், சீனியம்மாள், சண்முகராஜன், மரிய தங்கராஜ் ஈடுபட்டனர்.

வீ.கே.புதூரில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு


வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் வாசுதேவநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். வாசுதேவநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காகன பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணி வீரகேரளம்புதூர் அருகிலுள்ள அருந்தவபிராட்டி குளப் புறம்போக்கு பகுதியில் கடந்த 3 மாத காலமாக நடந்தது. தற்போது சோதனை ஓட்டமாக தண்ணீர் விடப்படுகிறது. 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கப்பட்டு இங்கிருந்து 100 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் மூலம் தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறது.

இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார். பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ள இடம், அமைக்கப்பட்ட விதம், சப்ளை செய்யப்படும் நீரின் அளவு குறித்து குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியரிடம் விளக்கம் கேட்டு ஆய்வு செய்தார்.

குடுநீர் திட்டப் பணிகளுக்காக வீரகேரளம்புதூர் பகுதியில் ரோடுகள் முழுவதும் தோண்டப்பட்டு இரு சக்கர வாகனங்கள் கூட தட்டு தடுமாறி செல்லும் நிலையை நேரில் கண்ட கலெக்டர் அதிகாரிகளிடம் இது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்காக குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறைக்கு 21 லட்ச ரூபாய் செலுத்தியிருப்பதாகவும், தண்ணீர் சோதன ஓட்டம் முடிந்ததும் ரோட்டில் கிடக்கும் மண் சமப்படுத்தி கொடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் பதிலளித்தனர்.

தொடர்ந்து அடுத்த மாத இறுதிக்குள் வீரகேரளம்புதூரில் தார்ரோடு மீண்டும் அமைத்து தரப்படும் என கலெக்டர் தெரிவித்தார். குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின்போது தென்காசி ஆர்டிஓ சேதுராமன், வீரகேரளம்புதூர் தாசில்தார் மணிபாபு, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் குத்தாலிங்கம், உதவி நிர்வாக பொறியாளர் முத்துக்குமாரசாமி, உதவி பொறியாளர் கோவிந்தராஜ், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சம்பத், உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

வீ.கே.புதூரில் கோர்ட் : கருப்பசாமிபாண்டியன் உறுதி

வீரகேரள்புதூர் : "திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் வீரகேரளம்புதூரில் கோர்ட் அமைக்கப்படும்' என கருப்பசாமிபாண்டியன் உறுதியளித்தார். தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் கருப்பசாமி பாண்டியன் வீரகேரளம்புதூரில் ஓட்டு சேகரித்து பேசியதாவது: ""ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் தாராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வீரகேரளம்புதூரில் சிற்றாற்றின் குறுக்கே 4 கோடி ரூபாயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 1.21 கோடி செலவில் தாலுகா கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. திமுக அரசு மீண்டும் அரியனை ஏறியதும் இது 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்படும். வீ.கே.புதூரில் நீதிமன்றம் அமைக்கப்படும். தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலக கட்டடம் கட்டப்படும். புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும். பஸ் ஸ்டாண்ட், நிழற்குடை ஏற்படுத்தப்படும். முக்கிய தேவையான முழுமையான தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டித் தரப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக வீடுகள் தோறும் நல்ல தண்ணீருக்கான இணைப்புகள் வழங்கப்படும். சுரண்டையை மையமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும் என தெரிவித்த கருத்து வீ.கே.புதூர் தாலுகா மாற்றப்படும் என தவறாக திரித்து விடப்பட்டுள்ளது. வீ.கே.புதூர் தாலுகாவில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்'' என்றார். தொடர்ந்து ராஜபாண்டி, தாயார்தோப்பு, கீழராஜகோபலப்பேரி, மேலராஜகோபாலப்பேரி, கோட்டை அண்ணாநகர், அதிசயபுரம், ராமனூர், கலிங்கப்பட்டி பகுதியில் ஓட்டு சேகரித்தார். வேட்பாளருடன் கீழப்பாவூர் ஒன்றிய சேர்மன் எஸ்.கே.டி.பி.காமராஜ், ஒன்றிய திமுக செயலாளர் சிவபத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முரளிராஜா, கிளை செயலாளர்கள் மாரியப்பன், சைமன், இருதாலய மருதப்பபாண்டியன், பாலசுப்பிரணியன், சேசுராஜன், பரசுராமன், லக்குமணன், பரமசிவன் உட்பட கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் பஞ்.,தலைவர் பரசுராமன், முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சேசுராஜன் ஆகியோர் வேட்பாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.