Friday, May 27, 2011

குண்டும், குழியுமான புழுதி பறக்கும் சாலை : வீ.கே.புதூர் பொதுமக்கள் அவதி

வீரகேரளம்புதூர் : குண்டும், குழியுமான புழுதி பறக்கும் வீ.கே.புதூர் மெயின்ரோட்டை சீரமைக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாலுகா தலைநகரமான வீரகேரளம்புதூர் சுரண்டை - நெல்லை மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், கனரா பாங்க், தபால் அலுவலகம், இளநிலை மின்பொறியாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரி, தனியார் பால் பதப்படுத்தும் நிலையங்கள் ஆகியவை இங்கு இயங்கி வருகின்றன.
இதனால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், அருகிலுள்ள வீராணம் பகுதியில் அமைந்துள்ள காற்றாடி மின் உற்பத்தி நிலையங்களுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களும் இந்த ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கும் பணிக்காக ரோடு நெடுகிலும் குழி தோண்டப்பட்டது.
இக்குழிகள் சரிவர மூடப்படாததாலும், ரோடு சீரமைக்கப்படாததாலும் தாலுகா அலுவலகம் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை ரோடு முழுவதும் பல்லாங்குழிகளாவே காட்சியளிக்கிறது. கடந்த மழைக்காலத்தில் சகதி குளமாக காட்சி தந்த ரோடு, தற்போது புழுதி மண்டலமாக மாறிவிட்டது. குழாய்களின் இணைப்புகளில் அடிக்கடி தண்ணீர் கசிவு ஏற்படுவதால் மீண்டும் மீண்டும் தோண்டப்படுகிறது.
இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துடனும், கவனத்துடனும் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வாகனங்கள் கடந்து செல்லும் போது உருவாகும் புகை மண்டலம் அலர்ஜி, ஆஸ்துமா, இளைப்பு போன்ற நோய்களை உருவாக்குகிறது. கடைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும், பயணம் செய்யும் பயணிகளும் குறிப்பாக முதியோர்களும் இதனால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
எனவே மீண்டும் மீண்டும் தோண்டாதவாறு குழாய்களில் கசிவை சீர்படுத்தி ரோட்டை செப்பனிட்டு புதிய தார்ரோடு அமைத்து தரவேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வீரகேரளம்புதூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் தேர்தலுக்கு முன் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இன்னும் ரோடு சரி செய்யப்படவில்லை. எனவே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த சங்கம் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment