Saturday, October 22, 2011

பார்வையற்றோர்க்கு தன்னம்பிக்கை தரும் செயற்கை கண்கள்

பார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தொண்டு நிறுவனம் சார்பில், சலுகை விலையில் செயற்கை கண்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பிறவியிலேயே பார்வை திறன் இல்லாதவர்கள், விபத்தில் கண் பார்வை இழந்தவர்கள், கண் சுருக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட குறைபாடுகள் உடையவர்களின் முகத்தோற்றம் பார்பதற்கு சற்று பொலிவற்று காணப்படும். இதனால், இக்குறைபாடுகளை உடையோர், தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்களை சமூகத்தில் இருந்து தனிமைபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.இதனால், பார்வையற்றவர்களில் திறமை மிக்க பல சாதனையாளர்களும், சத்தம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர். பார்வையற்றோரின் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலும் செயற்கை கண்கள் வடிவமைத்து, அவற்றை பொருத்தும் பணியில், திருவான்மியூர்,
"பிரீடம் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மருத்துவம் மற்றும் சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வரும், இந்த அறக்கட்டளை சார்பில் தற்போது, செயற்கை கண் நிபுணர்களைக் கொண்டு கண் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செயற்கை கண் நிபுணர் திவாகர் கூறியதாவது:கண் பார்வையற்றவர்கள் மற்றும் கண் இல்லாதவர்களுக்கு செயற்கை கண் பொருத்துவதன் மூலம் பார்வை திரும்ப பெறமுடியாது. ஆனால், இழந்த அவர்களது கண் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். இதனால், பார்வையற்றவர்களுக்கு தங்களுக்கு கண் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை கிடைக்கிறது.மாற்றுத் திறனாளிகளின் கண் மற்றும் மருத்துவச் சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர், மாதிரி அளவெடுத்து செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. "பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்' என்ற மருத்துவ வகை, பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த செயற்கை கண்கள் முற்றிலும் பாதுகாப்பானது. இதை,பொருத்திக்கொள்ள வயது வரம்பு கிடையாது.இந்திய அளவில், செயற்கை கண் வடிவமைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். தமிழகத்தில் தற்போது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் செயற்கை கண் பொருத்துவதற்கு, நான்கு முதல் ஐந்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி யுள்ளதால், அடித்தட்டு மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.எனவே, ஏழை எளிய மக்களும் பயனடையும் வகையில், எங்களின் அறக்கட்டளையின் சார்பில் தற்போது, குறைந்த விலைக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே
எங்களது நோக்கம்.ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செயற்கை கண் பொருத்த அரசு முன்வந்தால், அவர்களின் தன்னம்பிக்கை மேம்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment