Thursday, April 14, 2011

காணாமல் போன " ஈயம் பித்தளை பேரீச்சைப்பழம் '

பழைய ஈயம், பித்தளைகளுக்கு பேரீச்சைபழம் தரும் வியாபாரம் காலத்தின் கோலத்தால் காணாமல் போய்விட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், வீடுகளில் உபயோகிக்கப்படும் பொருட்கள், பயனற்று போன நிலையிலும் பத்திரப்படுத்தப்படும். காலி சைக்கிளுடன் வரும் வியாபாரி, அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு, அதற்கு பதிலாக பேரீச்சம் பழம் உள்ளிட்ட உண்ணும் பொருட்களை கொடுப்பார். அடுத்த 30 நிமிடத்தில் தள்ளமுடியாத அளவுக்கு ஈயம், பித்தளை சாமான்களை சைக்கிளில் ஏற்றிச்செல்வார். குழந்தைகளுக்கு ஜவ் மிட்டாய், சீனி மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டன. இதற்காக அக்கம் பக்கத்தில் வசிப்போரின் பொருட்களை கூட குழந்தைகள் பதுக்கி வைத்து மிட்டாய் வாங்குவதும், பின்னர் விபரம் தெரிந்து அடிவாங்குவதும் தொடர்ந்தது. கால மாற்றத்தில் ஈயம், பித்தளை பயன்பாடு கணிசமாக குறைந்தது. ஆர்வமாய் இருந்த திண்பண்டங்கள், நாகரீக வளர்ச்சியில் முக சுழிப்பை ஏற்படுத்தின. இதனால் ஈயம், பித்தளை தேடி வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர் .
பிளாஸ்டிக் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் பிரபலமானதால், வியாபாரிகளும் அதை சேகரிப்பதில் நாட்டம் காட்டினர். இம்முறை பண்டம் தருவதற்கு பதிலாக பணம் பெறப்பட்டது. இதனால், தமிழகத்தில் இருந்த ஒரே பண்டமாற்று முறையும் முடிவுக்கு வந்தது. இப்போதெல்லாம், "பழைய ஈயம், பித்தளைக்கு பேரீச்சை பழம்,' என்ற, வார்த்தையை கேட்க முடிவதில்லை.

No comments:

Post a Comment