Sunday, September 9, 2012

வீ.கே.புதூர் கோயில் கொடை விழா

வீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது.
வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த மாதம் 28ம் தேதி கால்நாட்டு விழாவுடன் துவங்கியது. அன்று இரவு 7.30 மணிக்கு கும்மிப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் மாலை 5 மணிக்கு வீ.கே.புதூர் திருவிளக்கு வழிபாட்டுக்குழு மற்றும் விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவில் கும்மிப்பாட்டு மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.

ஐந்தாம் நாள் விவேகானந்தர் இலக்கிய பேரவையின் சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. 6ம் நாள் நிகழ்ச்சியில் 2011-12ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ, மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு 10.30 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீபாராதனை நடந்தது.

ஏழாம் நாள் காலை 6 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒலிக்க, மேளதாள, நாதஸ்வர ஒலியுடன் வானத்தில் கருடன் வட்டமிட வருஷாபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தீர்த்தம் எடுத்து பவனி வரும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீபாராதனையும் நடந்தது.

எட்டாம் நாள் காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்திலிருந்து பால்குடம், கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால், தீர்த்த அபிஷேகங்களுடன் தீபாராதனையும், விசேஷ பூஜைகளும் நடந்தது. இரவு 9 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து அக்னிசட்டி ஏந்தி ஊர் பவனி வந்து காணிக்கை செலுத்தினர். இரவு 12 மணிக்கு உச்சிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கிடாய் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி கையில் ஏந்தி ஊர் பவனி வந்து அதனை ஆற்றில் கரைத்தனர்.

கொடை விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. விழா ஏற்பாடுகளை வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment